Wednesday, 19 November 2014

ஆக்கிரமிப்பால் நிறையாமல் போன காவேரியம்மாபட்டி பெரிய குளம்

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் காவேரியம்மாபட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. குளம்நிரம்பி மறுகால் சென்றால், குளத்தை நம்பி உள்ள காவேரியம்மாபட்டி, அணைப்பட்டி, இறையகவுண்டன்புதூர், அத்தப்பகவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு கிணற்றுப்பாசனம் கிடைக்கும். நீராதாரம்: விருப்பாட்சியில் உள்ள பெருமாள்குளம் நிரம்பி மறுகால் சென்றால்தான் இக்குளத்திற்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த மாதம் பெய்த பலத்த மழைகாரணமாக பரப்பலாறு அணை ஒரே நாளில் அதன் முழு கொள்ளவை எட்டியது.
இதனால் உபரி நீர் பெருமாள் குளத்திற்கு திறந்து விடப்பட்டது.

இதன் வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால், வெள்ளநீர் கால்வாயை ஓடைத்துக் கொண்டு அருகிலுள்ள தோட்டங்களுக்கு சென்றது. இதனால் பெருமாள்குளம் நீர்வரத்தின்றி காணப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகள்செப்பனிடப்பட்ட பின்பு, பரப்பலாறு அணை நீர் பெருமாள்குளத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதற்குள் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
ஏமாற்றம்: மழைகாலத்திற்கு முன்பே வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டு இருந்தால், இந்நேரம் பெருமாள்குளம் நிரம்பி மறுகால் சென்று, காவேரியம்மாபட்டி குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் குளத்தை சுற்றி உள்ள கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து இருக்கும். இதனால் வேளாண்தொழில் சுறுசுறுப்படைந்திருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு: பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தின் வரத்து கால்வாய் முழுவதும் முட்செடிகள் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் வரையறையின்றி மண் அள்ளப்பட்டு, பெரும் பள்ளங்கள் உள்ளதால் குளத்திற்கு வரும் நீர் வெகுநாட்களுக்கு தாக்குப்பிடிக்காது.

விவசாயிகள் கருத்துகள்:எம்.மாரியப்பன், காவேரியம்மாபட்டி: இக்குளத்தின் நீரை நம்பித்தான் சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறோம். மழை சரிவர பெய்யாமல் போனதாலும், பெய்யும் சிறிதளவு மழைநீரும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வழியிலேயே தடுக்கப்பட்டு வீணாவதாலும் கடந்த 2 ஆண்டுகளாக நீரின்றி காய்ந்து கிடக்கிறது. இக்குளத்தின் ஒரே நீராதாரம் பெருமாள்குளம் நீர் மறுகால் செல்வதின் மூலமும், இடைப்பட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீரும் ஆகும்.
மருதநாயகம், காவேரியம்மாபட்டி: சின்னகரட்டுப்பட்டியில் இருந்து வரும் வாய்க்கால் பராமரிப்பின்றி உ<ள்ளது. வாய்காலின் பல இடங்கள் இடிந்து <உள்ளது. இடிந்துள்ள பகுதிகள் வழியாக மழைநீர் வெளியேறி வீணாகி விடுவதால் குளத்திற்கு நீர் வந்து சேருவதில் சிக்கல் உள்ளது. இதனை செப்பனிட்டு நீர் வீணாவதை தடுக்க வேண்டும். வரத்துக்கால்வாய் மற்றும் குளத்தில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஹரிகரன், காவேரியம்மாபட்டி: நீர்வரத்திற்கு பெருமாள்குளத்தை நம்பி இருக்காமல் மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பரப்பலாறு அணைநீர் நேரிடையாக இக்குளத்திற்கு வரும்படி வாய்க்கால் அமைக்க வேண்டும். இதனால் பெருமாள் குளம் நிரம்பும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விரைவில் குளம் நிரம்பும் வாய்ப்பு ஏற்படும். குளத்தின் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை செப்பனிட வேண்டும். குளத்தில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனை வெட்டி அப்புறப்படுத்தினால்தான் குளத்திற்கு வரும் நீரானது, சில காலம் வற்றாமல் தாக்குப் பிடிக்கும்.
             
எல்.திருமூர்த்தி: பெருமாள் குளத்திற்கு நீர் கொண்டு வரும் வாய்க்கால் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மூலம் அதிகப்படியான நீர் வீணாகி விளைநில்களுக்கு சென்றது.
வாய்க்காலை சீரமைத்து பல நாட்கள் கழித்தே பெருமாள் குளத்திற்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மழை காலத்திற்கு முன்பே உடைந்த பகுதிகளை செப்பனிட்டு, தூர்வாரி இருந்தால் பெருமாள்குளம் நிரம்பியிருக்கும். இதன்மூலம் இந்த குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டிருக்கும். கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்,என்றார்.

No comments:

Post a Comment