Tuesday, 4 August 2015

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தக்கலை பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் குழாய் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அவ்வாறு தண்ணீர் கொண்டு வரும் போது வழியில் ஆங்காங்கே குடிநீரை சேகரிப்பதற்கு நீர்உந்து நிலையம் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளன. பின்னர் அந்த தண்ணீர் மாவட்டத்தில் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பெறப்படும் தண்ணீரின் அளவு போதுமானதாக இல்லை. இதனால் மாவட்டத்தில் பிற ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
    
2–ம் கட்ட திட்ட பணிகள் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது கரூர் மாவட்டம் காவிரி ஆற்று படுகையில் மாயனூர் என்னுமிடத்தில் இருந்து 2–ம் கட்டமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அந்த பகுதியில் ஆய்வு பணிகள் நடந்தது. இதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நத்தம், ஆத்தூர் போன்ற பகுதிகள் குடிநீர் வினியோகம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தும் பணி வடமதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத இரும்பு குழாய்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் கேட்ட போது, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 2–ம் கட்டமாக குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக பல்வேறு பகுதிகளில் குழாய்களை பதிப்பதற்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றனர்.

காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் இன்னொரு பெண்ணுக்கு 5 கிலோ எடையில் குழந்தை பிறந்தது

சின்னாளபட்டி,
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

     
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பரிசோதனை செய்த போது, கருப்பையில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் அவருக்கு நேற்று சுகப்பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் ஆகிய 3 குழந்தைகளும் பிறந்தன.
5 கிலோ எடையில் பிறந்த குழந்தை இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). கர்ப்பிணியான இவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதாகவும், எனவே அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. முதல் பிரசவத்திலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 5 கிலோ எடை இருந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கஸ்தூரிபா மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.

சந்தைக்கு வியாபாரிகள் வராததால் மாடுகளை விற்க விவசாயிகள் திணறல்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் வராததால், மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.தமிழ்நாட்டில் உள்ள மாட்டு வியாபாரிகள், லாரிகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 19 முதல் போராடி வருகின்றனர். அன்றிலிருந்து தமிழகத்தில் உள்ள சந்தைகளில் மாடுகள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வளர்ப்பு மாடுகளை விற்க சந்தைக்கு வரும் விவசாயிகள், விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான மாட்டுச் சந்தை வாரந்தோறும் திங்களன்று கூடுகிறது. இதில் 2 ஆயிரம் மாடுகள் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று சந்தைக்கு சொற்ப அளவிலான மாடுகள் மட்டுமே வந்தன. கறவை மாடுகள் சிலவற்றை மட்டும் விவசாயிகள் தங்களுக்குள் விற்றுக் கொண்டனர். இருந்த போதிலும் பெரும்பாலான மாடுகளை விற்க முடியவில்லை.
விவசாயி ஆறுமுகம் (தில்லைக் கவுண்டன் புதூர்): விவசாயிகள் வளர்க்கும் மாடுகளை அவ்வப்போது விற்று தேவைகளை சமாளித்து வந்தனர். கடந்த 2 வாரங்களாக இங்கு கொண்டு வந்த மாடுகளை விற்க முடியவில்லை.தரகர் சின்னச்சாமி (நாயக்கனூர்): கடந்த 2 வாரங்களாக சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வருகிறோம். விரைவில் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும், என்றார். மாட்டு வியாபாரிகளின் கோரிக்கைகளை அரசு விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டிசம்பருக்குள் "ஆன் லைனில்' கூட்டுறவு வங்கிகள்

திண்டுக்கல்:தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, "ஆன் லைனில்' இணைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 4 ,500 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, பராமரிப்பதற்கு கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் வரும் டிசம்பருக்குள் ஆன் லைனில் இணைக்கப்பட உள்ளன. அனைத்து விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும் கிட்டங்கிகள் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 2,500 கிட்டங்கிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த கிட்டங்கிகளில் அறுவடை நேரத்தில் விலை இல்லாதபோது, தானியங்களை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். தானிய அடமான கடன் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனி@வலு கூறியதாவது; விவசாய தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கம்ப்யூட்டர் மயமாக்குதல் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது. கிட்டங்கிகளை விவசாயிகள் பயன்படுத்தினால் விலை மதிப்பில் 75 சதவீதம் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உரங்களும் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை போல பணிகளை துரிதப்படுத்த உள்ளோம், என்றார்.

ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி 2014 நவ.,1 முதல்
நடக்கிறது. இப்பணி கலெக்டர் அலுவலகம், தாலுகா, மாநகராட்சி, நகராட்சி அலுவலக நிரந்தர
மையங்களில் நடக்கின்றன. இந்த பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் ஆக., 14 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நாட்களில் புகைப்படம் எடுக்க "டோக்கன்' பெற்றோருக்கு பின்பு தேதி அறிவிக்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் ஆக., 5 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இந்த பணி சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகளில் நடக்கும், என்றார்.

ஆடிப்பெருக்கு விழாவில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி

பழநி:ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பழநி கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்தூர், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்தனர். அருகேயுள்ள சண்முகநதி ஆற்றங்கரையில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை வடிவமைத்து அதற்கு சந்தனம், பொட்டு, மாலை அணிவித்தனர்.
பச்சரிசியில் சர்க்கரை கலந்து, தேங்காய் பழங்கள், மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் தேங்காயை நார் இல்லாமல் உரித்து தண்ணீரை எடுத்துவிட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள்ளு, நாட்டுசர்க்கரை நிரப்பி மூடினர். அத்தேங்காயை தீயில் சுட்டு எடுத்து அதிலுள்ள பொருட்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். பின் சுவாமிக்கு படைத்த பொருட்களை நதியில் கரைத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விருப்பாட்சி "தலையூத்து 'அருவியில் மக்கள் நீராடி மகிழ்ந்தனர்.
மேற்குமலை தொடர்ச்சியில், ஒட்டன்சத்திரம் அருகி<லுள்ள விருப்பாட்சி பகுதியில் தலையூத்து அருவி உள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் தலையூத்து அருவியாக மாறி பின்னர் நங்காஞ்சி ஆறாக பாய்கிறது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருக்கை(ஆடி18) முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அருவியில் நீராடிச் செல்வர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்ததால் பரப்பலாறு அணை நீரின்றி வறண்டிருந்தது. இதனால் அப்போது இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமின்றி காணப்பட்டது. தற்போது பரப்பலாறு அணையில் நீர் உள்ளதால், வழக்கம் போல் இந்த ஆண்டும் புதுமணத் தம்பதிகள் அருவியில் நீராடி, புத்தாடை அணிந்து மலை அடிவார கோயிலில் வழிபாடு நடத்தினர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள குழந்தைவேலப்பர் கோயிலிலும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாட்டம் நடந்தது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, போன்ற பிரசாதங்கள் வழங்கினர். அம்மன் சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் அம்மனை வணங்கினர்.

பழநி அருகே மாட்டுத்தாவணிகாங்கேயம் காளை ரூ. 2 லட்சம்

தொப்பம்பட்டி: பழநி அருகே தொப்பம்பட்டி மாட்டுத்தாவணி சந்தையில் ரூ.30ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை மாடுகள் விற்கப்படுகிறது. தொப்பம்பட்டி அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் மாட்டுத்தாவணி நடக்கிறது. நேற்றுமுன்தினம் (ஆக.,2 முதல் 5 வரை) துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது. இதற்காக இரண்டு தினங்களக்கு முன்பாகவே மாடுகள் வரத்து வங்கிவிட்டன. இதில், காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை உள்பட பல்வேறு இடங்களில் மாடுகளை கொண்டுவந்திருந்தனர். மாட்டுத்தாவணியில் மாடுகளுக்கான பல வண்ணக்கயிறு, சாட்டை, பெயின்ட் மற்றும் மண்வெட்டி, அருவாள்போன்ற விவசாயப் பொருட்கள் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் ரூபாய் வரை காங்கேயம் காளைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
உசிலம்பட்டி கருப்பசாமி கூறுகையில்,"" இவ்வாண்டு இரண்டு காங்கேயம் காளைகள் கொண்டுவந்துள்ளேன். விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலூட்டும் அறைகள் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில், பாலூட்டும் அறை துவக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலூட்டும் அறையை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் துவக்கினார். மேயர் மருதராஜ், முன்னிலை வகித்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலா, சுகாதார துணை இயக்குனர் சவுடம்மாள், மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர். மேயர் மருதராஜ் கூறுகையில், "தாய்ப்பாலூட்டும் அறையில் பாத்ரூம், குறைந்தபட்சம் ஐந்து சேர்கள், குப்பைத்தொட்டி, கைகழுவும் வசதி, பேன் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, என்றார்.

பழநியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொ) காளிமுத்து, வேணுகோபாலு எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சி தலைமைபொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி தலைவர் பழனியம்மாள், கமிஷனர் சவுந்திரராஜன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் <<உதயம்ராமசாமி பங்கேற்றனர்.
கொடைக்கானலில் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் ஜான் தாமஸ், ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுத்துரை கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி: தமிழகத்தில் பாலூட்டும் அறைகளை வீடியோ கான்பரன்ஸ் முறையில் சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அதற்குமுன்பாக, சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்டில் அறையை, காலை 10.30 மணிக்கு பேரூராட்சி தலைவர் முருகன் திறந்து வைத்தார். முதல்வர் துவக்கும் முன்பே அவர் திறந்து விட்டதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் முருகன் கூறும்போது,"" பொது சுகாதார துறையினர் 20க்கும் மேற்பட்ட பாலூட்டும் பெண்களை நிகழ்ச்சிக்காக வரவழைத்து விட்டனர். அவர்களை நீண்டநேரம் காக்க வைக்க இயலாது என வட்டார மருத்துவ அதிகாரி அவசரப்படுத்தியதால் கத்தரித்து திறப்பு விழா செய்யப்பட்டது,'' என்றார்.

10 ஊராட்சிகள் திண்டுக்கல்லுடன் இணைய கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைவதற்கு 10 ஊராட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதுபற்றிய தீர்மானம் இன்று நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
1866ல் நவம்பர் 1ல், தேர்வு நிலை பேரூராட்சிகளாக இருந்த பகுதிகள், 29 நகராட்சிகளாக அறிவிக்கப்பட்டன. அப்போது திண்டுக்கல், நகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்து 450. ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் நகரம் இருந்தது.
பின், நூற்றாண்டு விழா கொண்டாடிய திண்டுக்கல் நகராட்சி, 14.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.1 லட்சம் மக்கள் தொகையுடன், ஆண்டு வருவாய் ரூ.23 லட்சம் கொண்டதாக உயர்ந்தது. பின், 1988 ஜன., 23ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின், 1988ல் ஏப்., 1ல் 48 வார்டுகளாக சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது.
அதற்குப்பின், கடந்த 2014 பிப்., 19ல் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. தற்போது, மாநகராட்சி 110.20 சதுர கிலோ மீட்டரில், 3 லட்சத்து 23 ஆயிரத்து 868 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்காக திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள 10 ஊராட்சிகளையும் இணைக்க, "அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான' சிறப்பு தீர்மானம் இன்று நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் நடைபெற உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் நகரத்தை சுற்றியுள்ள 10 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய உள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் பெற ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் முடிக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டது. ஒருசில ஊராட்சிகள் எதிர்த்தன.
அந்த நிர்வாகத்திடமும் முறைப்படி ஒப்புதல் பெற்றுள்ளோம். விரைவில் அரசாணை பெறவே இந்த சிறப்பு தீர்மானம். அதுமட்டுமின்றி, "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு இன்று நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஊராட்சிகள் இணைந்தால் மாநகராட்சியின் எல்லை 127.66 சதுர கி.மீ., பரப்பளவாக அதிகரிக்கும், என்றனர்.