Monday, 17 November 2014

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை கலெக்டர் வெங்கடாசலம் தகவல்








திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் வெங்கடாசலம் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் செல்லக்குட்டியூர் ஊராட்சி பகுதியில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, கலெக்டர் வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருந்திய நெல்சாகுபடி முறையில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது விவசாய பயிர்களின் வளர்ச்சி, சாகுபடி முறைகள் மற்றும் வேளாண்மை திட்டங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம், அவர் கேட்டறிந்தார். இதுகுறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:-

கூடுதல் மழை

மாவட்டத்தில் பருவமழை தேவையான அளவு பெய்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்றாகும். எனவே, விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2014-2015 அக்டோபர் மாதம் முடிய 770 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது வழக்கமான சராசரியை விட 163 மி.மீ. அதிகம் ஆகும்.

உணவு தானிய உற்பத்தி

இதன் மூலம் ஆண்டு சராசரி சாகுபடி பரப்பளவான 1.75 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நெல், மக்காச் சோளம், தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகியவை பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, உணவு தானிய உற்பத்தி இலக்கான 5 லட்சம் மெட்ரிக் டன்னை விட கூடுதலாக, உற்பத்தி செய்து சாதனை படைக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் வேளாண்மை துறை மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான அளவு உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தும் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கலெக்டர் வெங்கடாசலம் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குனர் சம்பத், உதவி இயக்குனர் ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment