Saturday, 10 January 2015

ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஹரிகரன் தகவல்


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் இடைநிரவல் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டியை கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார். அதேபோல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நெசவாளர்களுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணியையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 83 ஆயிரம் செலவில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி, ரூ.14 லட்சத்து 43 ஆயிரம் செலவில் கிராமசேவை மையம் கட்டும் பணி ஆகியவற்றையும் கலெக்டர் ஹரிகரன் பார்வையிட்டார்.

 
இதையடுத்து கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது:–
பசுமைவீடுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் 2014–2015–ம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 2 ஆயிரத்து 172 பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் 635 வீடுகள் ரூ.27 கோடியே 36 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு 115 பசுமை வீடுகள் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தாய் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 46 லட்சம் மதிப்பில் 2,556 பணிகளும், இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் ரூ.14 கோடியே 40 லட்சம் மதிப்பில் 1,200 பணிகளும், 13–வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில் 30 பணிகளும் நடக்கின்றன.
ரூ.265 கோடியில் பணிகள் நிர்மல்பாரத் அபியான் திட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு 74 ஆயிரத்து 311 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 4,473 பேருக்கு ரூ.4 கோடியே 65 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தில் ரூ.19 கோடியே 30 லட்சம் செலவில் 781 பணிகளும், ஊரக கட்டமைப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 63 லட்சத்தில் 240 பணிகளும் நடக்கின்றன.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சத்தில் 5 ஆயிரத்து 165 பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிதிஆண்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.265 கோடியே 96 லட்சம் மதிப்பில் 89 ஆயிரத்து 493 வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 671 பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலாதேவி, துணைத் தலைவர் லோகநாதன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், கிரிராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment