திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளையை தடுக்க 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் கொடுக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.
இருசக்கர வாகன ரோந்து
திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி கொள்ளையை தடுக்க இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். எனினும், கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அந்த வாகனரோந்து பணியை மாற்றி அமைத்துள்ளார்.
மேலும் ரோந்து செல்வதற்கு கூடுதலாக இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு, போலீசாரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் சிவப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டு, ரோந்து வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன ரோந்து பணியை, சீலப்பாடி மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும் ரோந்து
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்கும் வகையில் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து செல்வார் கள். முதல்கட்டமாக திண்டுக்கல் நகர், புறநகர் உட்கோட்டங்களில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டது. இந்த பகுதிகளில் 20 வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்வார்கள்.
இந்த வாகன ரோந்து பணியை அந்தந்த உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள் நேரடியாக கண்காணிப்பார்கள். வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், நகைக்கடைகள், கடைவீதி அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். இந்த ரோந்து போலீசார் மக்களுடன், மக்களாக பழகி தகவல்களை சேகரித்து குற்ற சம்பவங்களை தடுப்பார்கள்.
தகவல் தெரிவிக்கலாம்
ஒவ்வொரு பகுதிக்கும் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்மூலம் பொதுமக்கள் ரோந்து போலீசாரை தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்துவார்கள்.
மேலும் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ரோந்து போலீசார் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சிறு, சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்கலாம். இதன் தொடர்ச்சியாக பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களிலும் வாகன ரோந்துதீவிரப்படுத்தப்படும்.
‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார்
இதுமட்டுமின்றி மாவட்ட போலீசுக்கு ‘வாட்ஸ்-அப்’ எண் 99949 34488 அறிமுகப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங் கள், அது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனே வாட்ஸ்அப் மூலம் போலீசுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் தனிப்பிரிவு அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து, ‘வாட்ஸ்-அப்’ புகார் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்ற சம்பவங்கள், தகவல்களை உடனுக்குடன் போலீசாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கள்ளத்துப்பாக்கி பற்றியும் மக்கள்தகவல்தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், வனிதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அய்யாத்துரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment