Saturday, 10 January 2015

திண்டுக்கல்லில் தொடரும் அவலம்: குழாய் உடைப்பினால் வீணாகும் தண்ணீர்

 






திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், குழாய் உடைப்பு காரணமாக சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
குடிநீர் குழாய் உடைப்பு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்விரு திட்டங்களின் மூலம் கிடைக்கிற தண்ணீரை சீராக வினியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.
தற்போது ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி வழிந்த போதிலும், திண்டுக்கல் நகரில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதே வாடிக்கையாக உள்ளது. இதற்கு வினியோக முறையில் ஏற்பட்ட குளறுபடியும், குழாய் உடைப்புமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் நகரில் குழாய் உடைப்பு இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குழாய்கள் உடைந்து சாலை, தெருக்களில் தண்ணீர் வீணாக ஓடுவது அன்றாட காட்சியாகி விட்டது.
வீணாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சுற்றுச்சுவரையொட்டி பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறி தண்ணீர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.
அலுவலக வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சென்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதுமட்டுமின்றி குழாய் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர், பழனி ரோட்டின் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் வீணாக சென்றது. குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் மாநகராட்சி நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக அங்கு சென்று சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment