Sunday, 17 May 2015

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
தொடர் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 27 கிலோ மீட்டர் தூரத்தில் சவரிக்காடு உள்ளது.
இங்கு பெய்த பலத்த மழை காரணமாக பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் பெரிய மரங்களும் முறிந்து விழுந்தன. விடிய, விடிய மழை பெய்ததால் மழைப்பகுதியில் உள்ள மண் அரிக்கப்பட்டு ரோட்டில் மலைபோல் குவிந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் போக்குவரத்து நேற்று காலை 7 மணி முதல் பாதிக்கப்பட்டது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சென்ற கார்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். பின்னர் சாலைகளில் உள்ள பாறைகளையும், மணல்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4½ மணி நேரம் இந்த பணிகள் நடந்தது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
இதேபோன்று பழனியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டமலை பகுதியிலும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த பகுதியில் உள்ள பாறைகளையும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
சீரமைக்கும் பணிகள் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் கூறுகையில், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருந்தது. இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மண்சரிந்து விழும் பகுதியை கண்டறிந்து அதை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment