Sunday, 17 May 2015

பழனி பகுதியில் தொடர்மழையால் அணைகளில் நீர்மட்டம் உயருகிறது


பழனி பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
வரதமாநதி அணை
      





தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம், கொடைரோடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய்கள், குளங்கள் ஓரளவு நிரம்பி உள்ளன.
அத்துடன் பழனி பகுதிகளில் உள்ள அணைகளான வரதமாநதி அணை, பாலாறு–பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வரதமாநதி அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ள வரதமாநதி அணையின் உயரம் 66.5 அடியாகும்.
தற்போது அணையில் 56.1 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 51 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து 2 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் மிக பெரியது பழனியை அடுத்துள்ள பாலாறு–பொருந்தலாறு அணை. இதன் உயரம் 65 அடியாகும். இதில் தற்போது 30.97 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக உள்ளது. 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே அமைந்துள்ளது குதிரையாறு அணை. இதன் உயரம் 80 அடி. இதில் தற்போது 45.8 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இங்கு நீரின் வரத்து 4 கன அடியாகவும், வெளியேற்றப்படுவது 3 கன அடியாகவும் உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழனி நகருக்கு குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கலாம் என பழனி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment