Tuesday, 4 August 2015

10 ஊராட்சிகள் திண்டுக்கல்லுடன் இணைய கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைவதற்கு 10 ஊராட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதுபற்றிய தீர்மானம் இன்று நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
1866ல் நவம்பர் 1ல், தேர்வு நிலை பேரூராட்சிகளாக இருந்த பகுதிகள், 29 நகராட்சிகளாக அறிவிக்கப்பட்டன. அப்போது திண்டுக்கல், நகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்து 450. ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் நகரம் இருந்தது.
பின், நூற்றாண்டு விழா கொண்டாடிய திண்டுக்கல் நகராட்சி, 14.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.1 லட்சம் மக்கள் தொகையுடன், ஆண்டு வருவாய் ரூ.23 லட்சம் கொண்டதாக உயர்ந்தது. பின், 1988 ஜன., 23ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின், 1988ல் ஏப்., 1ல் 48 வார்டுகளாக சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது.
அதற்குப்பின், கடந்த 2014 பிப்., 19ல் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. தற்போது, மாநகராட்சி 110.20 சதுர கிலோ மீட்டரில், 3 லட்சத்து 23 ஆயிரத்து 868 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்காக திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள 10 ஊராட்சிகளையும் இணைக்க, "அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான' சிறப்பு தீர்மானம் இன்று நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் நடைபெற உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் நகரத்தை சுற்றியுள்ள 10 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய உள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் பெற ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் முடிக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டது. ஒருசில ஊராட்சிகள் எதிர்த்தன.
அந்த நிர்வாகத்திடமும் முறைப்படி ஒப்புதல் பெற்றுள்ளோம். விரைவில் அரசாணை பெறவே இந்த சிறப்பு தீர்மானம். அதுமட்டுமின்றி, "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு இன்று நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஊராட்சிகள் இணைந்தால் மாநகராட்சியின் எல்லை 127.66 சதுர கி.மீ., பரப்பளவாக அதிகரிக்கும், என்றனர்.

No comments:

Post a Comment