Tuesday, 4 August 2015

சந்தைக்கு வியாபாரிகள் வராததால் மாடுகளை விற்க விவசாயிகள் திணறல்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் வராததால், மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.தமிழ்நாட்டில் உள்ள மாட்டு வியாபாரிகள், லாரிகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை 19 முதல் போராடி வருகின்றனர். அன்றிலிருந்து தமிழகத்தில் உள்ள சந்தைகளில் மாடுகள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வளர்ப்பு மாடுகளை விற்க சந்தைக்கு வரும் விவசாயிகள், விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான மாட்டுச் சந்தை வாரந்தோறும் திங்களன்று கூடுகிறது. இதில் 2 ஆயிரம் மாடுகள் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று சந்தைக்கு சொற்ப அளவிலான மாடுகள் மட்டுமே வந்தன. கறவை மாடுகள் சிலவற்றை மட்டும் விவசாயிகள் தங்களுக்குள் விற்றுக் கொண்டனர். இருந்த போதிலும் பெரும்பாலான மாடுகளை விற்க முடியவில்லை.
விவசாயி ஆறுமுகம் (தில்லைக் கவுண்டன் புதூர்): விவசாயிகள் வளர்க்கும் மாடுகளை அவ்வப்போது விற்று தேவைகளை சமாளித்து வந்தனர். கடந்த 2 வாரங்களாக இங்கு கொண்டு வந்த மாடுகளை விற்க முடியவில்லை.தரகர் சின்னச்சாமி (நாயக்கனூர்): கடந்த 2 வாரங்களாக சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் பிழைத்து வருகிறோம். விரைவில் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும், என்றார். மாட்டு வியாபாரிகளின் கோரிக்கைகளை அரசு விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment